Tamil News
படிக்க சொல்லி திட்டிய அப்பா; கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மகன்; ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
திருவாரூர் அருகே படிக்க சொல்லி பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை ஒன்றைரை ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
திருவாரூர் அருகே இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் விறகு வியாபாரம் செய்து வருகிறார்.
இவருடைய மகன் மாதேஷ் அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
அறிவழகன் தனது மகனை சரியாக படிக்கவில்லை என அவ்வப்போது கண்டித்து வந்திருக்கிறார்.
இதனிடையே, படிக்கவில்லை என அப்பா திட்டியதால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டை விட்டே வெளியேறியிருக்கிறார் மாதேஷ்.
இதனால் அதிர்ச்சியடைந்த அறிவழகன் தனது மகனை தேடியலைந்திருக்கிறார். ஆனால் அவரால் மாதேஷை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, திருவாரூர் காவல்நிலையத்தில் மாதேஷின் பெற்றோர் மகனை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர்.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் பல்வேறு வகையில், மாதேஷை தேடிவந்தனர். ஆனால், பலன் கிடைக்கவில்லை.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவழகன் தனது வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது மாதேஷுக்கு புது ஆதார் கார்டு வந்திருக்கிறது.
இதனால் குழம்பிப்போன அறிவழகன் காவல்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து சொல்லியிருக்கிறார்.
ஆதார் கார்டு
இதனால் பரபரப்பான அதிகாரிகள் இதுகுறித்த விசாரணையில் இறங்கினர்.
அதன் பலனாக மாதேஷ், மும்பையில் இருப்பது தெரியவந்திருக்கிறது. அங்கே, மண்டபங்களை அலங்கரிக்கும் பணியில் மாதேஷ் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
புது ஆதார் கார்டு வேண்டி மாதேஷ் விண்ணப்பிக்க, அவருக்கு ஏற்கனவே ஆதார் இருந்ததால் உண்மையான முகவரிக்கு கார்டு வந்திருக்கிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார் அறிவழகன்.
உடனடியாக செயலில் இறங்கிய காவல்துறையினர் தந்தை அறிவழகனை அழைத்து கொண்டு மும்பை சென்று மாதேஷை மீட்டனர். அப்போது மகனை கண்ட தந்தை அறிவழகன் ஓடி சென்று கட்டி அனைத்து கண்ணீர் விட்டு கதறிய நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
