Tamil News
அரசுப்பள்ளியில் தன் மகனை சேர்த்த கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி; குவியும் பாராட்டுக்கள்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ஹரிகிரன் பிரசாத் தன் மகனை அரசு பள்ளியில் படிக்க சேர்த்துள்ளதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நாளுக்கு நாள் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ஹரிகிரன் பிரசாத், தனது மகன் நிஸ்ரிக்கை நாகர்கோவில் கோட்டார் கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை அரசு தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் நேற்று தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் சென்று பள்ளியில் சேர்த்தார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹரி கிரண் பிரசாத் கடந்த 26ஆம் தேதி குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் .
விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் தனது தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கு முதல் சல்யூட் அடித்து தனது பணியை தொடங்கினார்.
காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் புகார் மனுக்கள் உடனடியாக உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
தற்போது கவிமணி அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் தனது மகன் நிஸ்ரிக்கை சேர்த்துள்ளார்.
இது அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் அரசு பள்ளிகளின் தரம் உயரும் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரியான ஒருவர் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் தந்து குழந்தையை சேர்ந்து இருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
