Tamil News
கோவில் பணத்தை திருடிவிட்டு வீடு சென்ற திருடனுக்கு வந்த பல சோதனைகள்; மனம் திருந்தி திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் போட்ட ஆச்சர்ய சம்பவம்..!
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி மலையில் 60 ஏக்கர் பரப்பளவில் 1008 சுயம்பு லிங்கங்கள், காஞ்சனகிரீஸ்வரர் கோயில், விநாயகர் சன்னதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.
இங்குள்ள 1008 சுயம்பு லிங்கங்களுடன் கூடிய விநாயகர் சன்னதியில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இதில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப காணிக்கை செலுத்துகின்றனர்.
இங்கு மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம், பிரதோஷம், கிருத்திகை, சிவராத்திரி, அமாவாசை, சங்கடஹர சதுர்த்தி, ஆடி அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி அதிகாலையில் மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்று உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கோவில் நிர்வாகத்தினர், நேற்று காஞ்சனகிரி மலைக்கோவில் உண்டியலை திறந்து பணத்தை எண்ண திட்டமிட்டனர்.
அதன்படி, தலைவர் பாலன் மற்றும் குழுவினர் உண்டியலை திறந்தபோது அதில் பணத்துடன் கடிதம் ஒன்று இருந்தது.
அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள். நான் சித்ரா பௌர்ணமி முடிந்து சில நாட்கள் கழித்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டேன்.
அப்போதிலிருந்தே எனக்கு மனசு சரியில்லை. நிம்மதி இல்லை.
வீட்டிலும் நிறைய பிரச்னை தொடர்ந்து வருகிறது.
எனவே, நான் மனம் திருந்தி உண்டியலில் இருந்து எடுத்த பணம் ரூ.10 ஆயிரத்தை போட்டு விட்டேன்.
எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கடவுளே என்னை மன்னிப்பாரா தெரியாது. வணக்கம்” என்று எழுதப்பட்டு இருந்தது.
கடிதத்துடன் ரூ.500 நோட்டுகளாக ரூ.10 ஆயிரம் இருந்தது. இத்தகவல் காட்டுத்தீ போல் அக்கம் பக்கம் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
