Tamil News
“அப்பா எங்களை தேட வேண்டாம்” – தீபாவளிக்கு எடுத்த புது துணியுடன் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான இரு மாணவிகள்…!
திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் கடிதம் எழுதி வைத்து விட்டு இரண்டு பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே காந்திபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் செல்வஹர்ஷனா (வயது.17)
இவரும், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாமகோட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவர் மகள் ஞானதர்ஷினி (17) ஆகிய இருவரும் தோழிகளாக பழகி வந்தனர்.
இவர்கள் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை டியூசன் செல்வதாக கூறிவிட்டு சென்றவர்களை காணவில்லை.
டியூசனுக்கும் போகவில்லை என தெரிகிறது. இருவரும் தீபாவளிக்கு எடுத்த புது துணியை மட்டும் எடுத்து பேக்கில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதில் மாணவி செல்வஹர்ஷனா வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். என்னை தேட வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த மாணவியின் தாயார் முத்துலட்சுமி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவிகளை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி.முருகன் உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து மாணவிகளை தேடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையின் போது, இரண்டு மாணவிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஒரே நேரத்தில் காணாமல் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
