Tamil News
திருமணமாகி 25 ஆண்டுகளாக குழந்தை பேறு இல்லாமல் இருந்த பெண் தன்னுடைய 50-வது வயதில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த அதிசயம்..!
சென்னை எழும்பூா் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சைகளின் பயனாக 50 வயது பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர் ராதிகா, 50. திருமணமாகி 25 ஆண்டுகளாக குழந்தை இல்லை.
பணம் சேர்த்து வைத்து, தனியார் குழந்தையின்மை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கருத்தரித்துள்ளார்.
ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, கால்கள் வீக்கம் அடைந்து, நெஞ்சில் நீர் கோர்த்தது.
இந்நிலையில், எழும்பூர் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனைப்படி, மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
கருவில் குழந்தையின் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், அதற்கான சிகிச்சை மற்றும் குழந்தையின் நுரையீரல், மூளை வளர்ச்சிக்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் 32 வாரத்தில் குறைமாத பிரசவத்தில், அறுவை சிகிச்சை வாயிலாக பிரசவம் நடந்தது.
இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு மாதத்திற்கு, ‘இன்குபேட்டர்’ கருவியில் வைத்து, குழந்தைகள் பராமரிக்கப்பட்டன.
தற்போது, தாயும், குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்.
இதே போல, 47 வயதான வள்ளி என்பவருக்கு 17 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அதற்கான சிகிச்சை பெற்று கருத்தரித்தாா்.
இவருக்கு எட்டாம் மாதத்தில் கால்களில் வீக்கமும், ரத்த அழுத்தமும் ஏற்பட்டதால், எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இவருக்கும் அறுவை சிகிச்சை வாயிலாக குறைமாதத்தில் பிரசவம் நடந்ததது.
இரண்டு பெண் குழந்தைகள் பெற்றெடுத்தார்.
குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இன்குபேட்டா் மூலம் குழந்தை பராமரிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன் வாயிலாக குழந்தையின் எடையும் அதிகரித்தது.
குழந்தை பெற்றெடுத்த இரண்டு பெண்களையும் மருத்துவமனை ஊழியர்களும், உறவினர்களும் வாழ்த்தினர்.
