Uncategorized
அடிக்கடி மின்தடை; கோபத்தில் மின்வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி, லைன் மேன் மண்டையை உடைத்த பொதுமக்கள்..!
அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் கோபத்தில் மின்வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி, லைன் மேன் மண்டையை உடைத்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகரை சேர்ந்தவர் குப்பன்.
இவர் மணவாள நகர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் மேனாக வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுக்க மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வகையில் மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று நேற்று இரவும் வழக்கம் போல் மணவாளநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு உள்ளது.
உடனடியாக மின்வாரிய ஊழியர் குப்பன் அங்கு சென்று மின்தடையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டார்.
அந்த நேரம் அப்பகுதியை சேர்ந்த 5 பேர் மின்தடை ஏன் ஏற்படுகிறது என குப்பனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், மின்வாரிய அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றம் நாற்காலிகளை அடித்து உடைத்தனர்.
மேலும், தடுக்க வந்த ஊழியர் குப்பனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கினார்.
இதில் குப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
டாக்டர்கள் குப்பனுக்கு தலையில் 7 தையல் போட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
