Viral News
திறமையால் காய்கறி வியாபாரியின் மகள் நீதிபதியாக தேர்ச்சி; குவியும் பாராட்டுக்கள்..!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் அசோக் நாகர்.
இவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரின் ஒரே மகள் அங்கிதா நாகர் (வயது.29).
படிப்பில் மிகவும் சுட்டியான அங்கிதாவுக்கு இளமையிலேயே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது.
ஆனால், மருத்துவம் படிக்க அதிக பணம் செலவழிக்க வேண்டும். அதனை தமது குடும்பத்தால் செய்ய முடியாது என தெரிந்து தனது ஆசையை மாற்றிக் கொண்டார்.
டாக்டருக்கு பதிலாக சட்டத்துறையை தேர்ந்தெடுத்தார்.
சட்டத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்து சிவில் ஜட்ஜ் தேர்வு எழுதினார்.
3 முறை சிவில் நீதிபதிக்கான தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறாத நிலையில் தொடர்ந்து மனம் தளராமல் தற்போது நான்காவது முறையாக தேர்வில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
பொருளாதார ரீதியாக பல கஷ்டங்கள் வந்தபோதிலும் தனது மகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நிலையாக இருந்ததாக அங்கிதாவின் தந்தை அசோக் கூறுகிறார்.
கல்லூரி சென்று வந்த பிறகு தந்தையுடன் சேர்ந்து காய்கறி வியாபாரத்தில் ஈடுபடுவாராம் அங்கிதா.
தற்போது சிவில் நீதிபதி Class-II தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார் இவர்.
இது குறித்து அங்கிதா நாகர் கூறுகையில், “மூன்று முறை தோல்வியுற்ற போதிலும், நான் கைவிடவில்லை,
எனது இலக்கை அடைவதில் கவனம் செலுத்தினேன். இந்தப் போராட்டம் எனக்குக் கதவுகளைத் திறந்தது, நான் முன்னேறிச் சென்றேன்” என்றார்.
பின்னர், சிவில் நீதிபதியாக தனது பணியைத் தொடங்கிய பிறகு, தனது நீதிமன்றத்திற்கு வரும் எவருக்கும் நீதியை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதாக அங்கிதா நாகர் கூறினார்.
கல்வி மட்டுமே நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதை மத்திய பிரதேசத்தை சேர்ந்த அங்கிதா மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
தன்னுடைய மகளின் வெற்றி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறும் அசோக்,” பெண் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும். அவர்களது விருப்பத்திற்கு மீறி திருமணம் செய்துவைக்க கூடாது.
பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கவேண்டும்” என்றார்.
தந்தை தள்ளுவண்டியில் காய்கறி விற்றுவரும் நிலையில், கஷ்டப்பட்டு படித்து நீதிபதியாக உயர இருக்கும் அங்கிதா நாகருக்கு அந்த பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
