Tamil News
“காதலிக்கும் போதும்; குடும்பம் நடத்தும் போதும் இனிச்சது; இப்ப கசக்குதா” – சாதியை காரணம் காட்டி கைவிட்ட கணவருக்கு எதிராக போராடிய பெண்..!
காதலித்து திருமணம் செய்து விட்டு இரண்டு மாதம் குடும்பம் நடத்திய பின், தாழ்த்தப்பட்ட பெண் என கூறி கைவிட்டு சென்ற கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் ஒருவர் கரூர் எஸ்.பி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்த காளையபட்டியை சார்ந்த ரேவதி என்ற இளம்பெண் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.ஸி நர்சிங் படித்து வந்துள்ளார்.
அப்போது தரகம்பட்டியை அடுத்த செவலூரை சார்ந்த சசிகுமார் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கோவையில் திருமணம் செய்து கொண்டு 5 நாட்கள் தங்கியுள்ளனர்.
அப்போது இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் தன் மகளை காணவில்லை எனக் கூறி ரேவதியின் தந்தை கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் அவர்களை மீட்ட போலீசார் காவல் நிலையத்தில் வைத்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இருவரும் அவரவர் பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளனர்.
இந் நிலையில் ரேவதியிடம் அடிக்கடி செல்போனில் பேசிய சசிகுமார் நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது எனக் கூறி கடந்த மே மாதம் 17ம் தேதி அழைத்துக் கொண்டு ஈரோடு மாவட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து மீண்டும் தாலி கட்டியுள்ளார்.
பின்னர் தமது உறவினர் வீட்டில் தங்கி 14 நாட்கள் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த சசிக்குமாரின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த உனக்கு என் மகன் கேட்குதா எனக் கூறி தாக்கியும், தனி அறையில் அடைத்து வைத்தும் சித்திரவதை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜூன் 6ம் தேதி காரில் ஏற்றிக் கொண்டு வந்த சசிக்குமாரின் உறவினர்கள் ரேவதியின் வீட்டருகே இறக்கி விட்டுச் சென்று விட்டனர்.
நடந்தவற்றை வீட்டில் சொன்ன ரேவதி தன்னை காதலித்து, திருமணம் செய்து, தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டு நான் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் என்னை ஒதுக்கிய சசிகுமார் மற்றும் அவரின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலில் வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், மத்திய மண்டல் காவல் துறை தலைவரிடமும் புகார் அளித்துள்ளார்.
அவர்களின் பரிந்துரையின் கீழ் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமாதானமாக போகும்படி கூறியதாக தெரிகிறது.
தனது புகாரின் பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், குளித்தலை காவல் துணை கண்காணிபாளர் அலுவலகம் என மாறி, மாறி அலைக்கழிப்பதாக கூறி தாந்தோன்றிமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு ரேவதியின் உறவினர்கள் இரவு நேரத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
ஆனால், போலீசாரின் சமாதானத்தை ஏற்க மறுத்து உடனடியாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தால் தான் கலைந்து செல்வோம் எனக் கூறி காவல் கண்காணிப்பாளர் அலுவலக நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் சசிக்குமார் வீட்டிலும், குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் தரக்குறைவாக நடத்துவதாக ரேவதி குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை சமாதானம் செய்தும், நாளை முதல் தகவல் அறிக்கை தரப்படும் என உறுதி அளித்ததன் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
