World News
“நான் எனது விமான பொம்மையை திருமணம் செய்ய இருக்கிறேன்” – இளம்பெண்ணின் பகீர் அறிவிப்பு..!
ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமானத்தை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.
ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமான பொம்மையை காதலித்து வருவதாகவும் அதையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருப்பது இணைய உலகில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ஜெர்மனியின் டார்ட்மண்ட் பகுதியை சேர்ந்தவர் சாரா.
23 வயதான இவர் விமான பொம்மையை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறுகிறார்.
முன்பு, மனிதர்களுடன் டேட்டிங்கில் இருந்ததாகவும் அதன் பின்னர் இந்த பொம்மையே தனது சிறந்த துணையாக இருக்கும் என நினைப்பதாகவும் சாரா தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தனது 14 ஆம் வயதில் ரயில் பொம்மையுடன் காதலில் இருந்ததாகவும், அதன் பிறகு இந்த 737 போயிங் விமான பொம்மை தனது மனதை கொள்ளையடித்ததாகவும் கூறுகிறார் சாரா.
இதுபற்றி சாரா பேசுகையில்,”நான் ஏற்கனவே இரண்டு ஆண்களுடன் காதல் வயப்பட்டிருக்கிறேன்.
ஆனால், என்னுடைய தேவை என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
இப்போது நான் தெளிவடைந்துவிட்டேன். அதில் உறுதியாகவும் இருக்கிறேன்.
நான் ஒருவரை அணைத்துக்கொள்ள விரும்பாத போது, நான் ஈர்ப்பில்லாதவளாக அவர்கள் நினைப்பதை உணர முடிகிறது.
ஆனால், எனது பொம்மைகள் எப்போதும் அப்படி ஒரு சங்கடத்தை எனக்கு தருவதில்லை” என்கிறார்.
தனது விமான காதல் குறித்து பகிர்ந்துகொண்ட அவர்,” நான் எனது விமானத்தை நேசிக்கிறேன்.
அதன் முகம், இறக்கைகள், எஞ்சின் உள்ளிட்ட அனைத்தும் எனக்குள் காதலை தோற்றுவிக்கின்றன.
விமானங்கள் என்றாலே எனக்கு கொள்ளை பிரியம். அதன் காரணமாகவே விமான பயணத்தினை அடிக்கடி மேற்கொண்டு வருகிறேன்.
அப்போதும்கூட என்னுடைய விமான பொம்மைகளை எடுத்துச் செல்வேன்.
என்னுடைய ஆசைகள் பலருக்கும் புரிவதில்லை. ஆனால், சிலர் என்னுடைய மனதை புரிந்துகொண்டு எனக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.
நான் விமானத்தை திருமணம் செய்துகொள்ளவே விரும்புகிறேன்.
ஆனால், அது ஜெர்மனியில் தடைசெய்யப்பட்டது என்பதையும் அறிவேன்” என்றார்.
தனது உடலிலும் விமானத்தின் உருவத்தை டாட்டூ போட்டுள்ள சாரா, தனது வாழ்க்கையில் ஈடு இணையற்ற உறவாக விமானம் இருப்பதாக கூறுகிறார்.
