Tamil News
வேறொரு பெண்ணுடன் கணவர் கள்ளத்தொடர்பு; மனம் உடைந்த மனைவி 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரிழந்த பரிதாபம்..!!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுகா கே மோரூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்.
இவருடைய மனைவி பெயர் மரகதம். இவர்கள் இருவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு, 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
பிரபாகரன் பிளாஸ்டிக் பைகளை உருக்கி பிளாஸ்டிக் உருண்டைகளாக வெளியில் அனுப்பும் கம்பெனி ஒன்றை அப்பகுதியில் வைத்து நடத்தி வருகிறார்.
இதில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபாகரனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு அவரது மனைவி சந்தேகமடைந்தார்.
இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் இவர்கள் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டதால் மரகதம் கோபித்துக் கொண்டு அருகில் உள்ள தனது பெரிய மாமியார் வீட்டுக்கு சென்று குழந்தைகளுடன் தங்கினார்.
இதனை தொடர்ந்து, மனம் சமாதானமாகி நேற்று மாலை குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பிரபாகரன் தனது வீட்டில் இருந்து வேலைக்கு வந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவர் தனது மனைவி பிள்ளைகளை காணாமல் திகைத்து போயுள்ளார்.
அருகில் உள்ள வீடுகளுக்கும் சென்று தேடிப்பார்த்துள்ளார். எங்கும் அவர்களை காணவில்லை.
தனது வீட்டின் அருகே உள்ள கிணற்று பகுதியில் தனது மனைவி செருப்புகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று கருதி போலீசார் மற்றும் காடையாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காடையாம்பட்டி தீயணைப்பு துறையினர் கிணற்றில் மூழ்கி சடலங்களை மீட்டனர்.
இச்சம்பவம் பற்றி தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பிரபாகரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
