Tamil News
அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்த இளம்பெண் திடீர் மரணம்; உறவினர்கள் போராட்டம்..!
குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்த இளம்பெண் திடீரென இறந்தார்.
அரசு டாக்டர்களின் தவறான சிகிச்சையால் அவர் இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார்(35).
இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு வினோதினி (30)என்ற மனைவியும், சோனியா(5) மகளும், மோனிஷ்(2) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 30-ஆம் தேதி இவருடைய மனைவி வினோதினிக்கு சின்னபோரூரிலுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 3 தினங்களாக கடுமையான வயிற்று வலி மற்றும், சிறுநீர், மலம் வெளியேறாமல் இருந்துள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் வினோதினி உயிரிழந்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து கூறிய அவர்கள்,
சின்னப்போரூர் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் பொழுது கர்ப்பப்பைக்கு செல்லும் குழாயை தடை செய்யும் பொழுது, அருகில் இருக்கும் சிறுநீரக பாதை மற்றுப் மலம் வெளியேறும் பாதைக்கான குழாயை சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் சிறுநீர் மற்றும் மலம் ஆகியவை வெளியேறாமல், அந்த பாதையில் இருந்து கசிந்து, வயிறு முழுவதும் மலம் மற்றும் சிறுநீர் நிறைந்தது என கூறியுள்ளனர்.
அதனால் தான் வயிற்றுப்பகுதி வீக்கமடைந்திருப்பதாகவும், இதன் காரணமாக குடல் பகுதி முழுவதும் அழுகியதுடன், கிட்னியும் செயலிழந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் உடற்கூறு ஆய்விற்கு தங்களது கையெழுத்து இல்லாமலேயே உடலை எடுத்துச்சென்றுள்ளதாகவும், இதில் தவறான அறிக்கை தயார் செய்ய முடியும் எனவும் சந்தேகம் எழுப்பினர்.
இதனால் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போரூர் போலீசார் சமாதானம் செய்து அனைவரையும் கலைந்து போக செய்தனர்.
இந்நிலையில் வளசரவாத்தில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது,
“இளம்பெண் வினோதினி உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளோம்.
இதில் தவறு நடந்திருந்தது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
