Tamil News
குடும்பத்திற்காக வெளிநாட்டில் கஷ்டப்பட்ட கணவன்; உள்ளூரில் தகாத உறவு கொண்ட மனைவி; இறுதியில் கணவனுக்கு நேர்ந்த விபரீதம்..!!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் கணவரை கொன்று புதைத்தவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே களரி கண்மாய் பகுதியில் ஏர்வாடி அருகே உள்ள இதம்பாடல் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் தர்மர் (வயது40) என்பவருடைய புதிய மோட்டார் சைக்கிள் என்ஜின் இல்லாமல் கிடந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் மேலும் தேடிப்பார்த்தபோது தர்மரின் கைப்பை கிடைத்தது.
போலீசாரின் விசாரணையில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி புதிய மோட்டார்சைக்கிளில் வெளியில் சென்ற தர்மர் மாயமானதும் அவரை தேடிவந்த தகவலும் கிடைத்தது.
இதுதொடர்பாக அவருடைய தங்கை ஏர்வாடி வடக்குத்தெரு யசோதை (38) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
தர்மருக்கு திருமணமாகி பாண்டியம்மாள் (32) என்ற மனைவியும், தர்மபார்த்தசாரதி என்ற மகனும், கார்த்தீஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த தர்மர் கடந்த 2010-ம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
தர்மர் வெளிநாட்டில் வேலை பார்த்த போது பாண்டியம்மாளுக்கும், அப்பகுதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் முருகேசனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
கணவர் தர்மர் வெளிநாட்டில் இருந்து வந்ததும், அங்கிருந்து அனுப்பிய பணத்தை மனைவி பாண்டியம்மாளிடம் கணக்கு கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து பாண்டியம்மாள் முருகேசனிடம் கூறியுள்ளார். இதையடுத்து தர்மரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
தர்மரை அவரை இருசக்கர வாகனத்தில் வரவழைத்து பனையடியேந்தல் அருகே காட்டுப்பகுதியில் அடித்துக் கொலை செய்து களரி கண்மாய் கால்வாய்க்குள் புதைத்தது தெரிய வந்தது
இதையடுத்து போலீஸார் முருகேசன், அவரது நண்பர்கள் மேலமடையைச் சேர்ந்த ரவி, வேந்தோணியைச் சேர்ந்த காளிதாஸ், புத்தேந்தலைச் சேர்ந்த குமார், மனைவி பாண்டியம்மாள் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் நேற்று, தடயங்களை அழித்து கொலை செய்ததற்காக முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தார்.
அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பாண்டியம்மாள் உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.
