Tamil News
கணவரை இழந்த தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகன்; குவியும் பாராட்டுக்கள்..!!
கணவனை இழந்த பெண் ஒருவர் காதலர் தினத்தன்று, தனது குடும்ப நண்பரை மகன் ஆதரவுடன் கரம் பிடித்த சம்பவம் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
இந்தியாவில் மரபு, பாரம்பரியம், கலாச்சாரம் என பல காரணங்களை சொல்லி, கணவனை இழந்த இளம் கைம்பெண்ணுக்கு கூட திருமணம் செய்து வைக்க சொந்த குடும்பத்தினர் தயங்குகின்றனர்.
குழந்தை இல்லாத இளம் பெண் கணவனை இழந்து மறுமணம் செய்து கொண்டால், அதனை சமூகம் அங்கீகரிக்கும்.
குழந்தையுடன் இருப்பவர்கள் மறுமணம் செய்தால் அதே சமூகம் விமர்சனங்களை வாரி வீசுவதை நாம் கண்கூடாக பார்த்திருப்போம்.
சில சமயங்களில் குடும்பத்தினர் கூட பிள்ளைகளை காரணமாக காட்டி பெண்களுக்கு மறுமணம் செய்துவைப்பது கிடையாது.
ஆனால், கணவரை இழந்த ஒரு தாய்க்கு மகன் ஒருவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது.
மும்பையில் வசித்து வருபவர் 52 வயது பெண்மணியான காமினி காந்தி, 44 வயதில் தனது கணவனை இழந்தவர்.
இவருடைய மகன் ஜிமீத் காந்தி துபாயில் பணியாற்றி வருகிறார்.
2013 ஆம் ஆண்டு தனது 44 வது வயதில் தன்னுடைய கணவனை இழந்த காமினி காந்திக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு 3 ஆம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
அதற்கு பிறகு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பலமுறை கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் 2 வருட போராட்டத்திற்கு பிறகு கேன்சரில் இருந்து மீண்டுள்ளார்.
இதனையடுத்து வயது, மரபு போன்ற பழங்கால காரணங்களையெல்லாம் கடந்து தனது 52 வது வயதில் குடும்ப நண்பர் ஒருவரை மறுமணம் செய்திருக்கிறார்.
தனது அம்மா மறுமணம் செய்துள்ளதை ஜிமித் காந்தி தனது லிங்க்டு இன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மகனாக இருந்து பழைய கலாச்சாரங்களை எல்லாம் பொருட்டாக நினைக்காமல் தூசி போல் தட்டிவிட்டு தனது தாயின் மறுமணம் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளது வரவேற்க தக்க ஒன்றாக இருக்கிறது.
மேலும், கணவனை இழந்த பெண் 52 வயதில் தனது குடும்ப உறுப்பினரை மறுமணம் செய்திருப்பதை பலரும் பாராட்டி, அந்த தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர்.
