Tamil News
“நான் தான் ஜெயலலிதாவின் வாரிசு; எனக்கு சான்றிதழ் கொடுங்க” – தாலுகா அலுவலகத்தில் தகராறு செய்த பெண்..!!
மதுரை தாலுகா அலுவலகத்தில், தான் ஜெயலலிதாவின் வாரிசு எனக் கூறி, தனக்கு வாரிசு சான்றிதழ் கொடுங்க என துணை தாசில்தாரிடம் ஒரு பெண் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை டிஆர்ஓ காலனி திருவள்ளுவர் நகரில் முருகேசன்- மீனாட்சி (38) தம்பதி வசித்து வருகின்றனர்.
இவர் இன்று மதுரை தாலுகா அலுவலகத்தில் அளித்த சான்றிதல் விண்ணப்பம் ஒன்று அதிகாரிகள் உள்பட அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதாவது, மீனாட்சி, தனது தந்தை சோபன்பாபு, தாய் ஜெயலலிதா என்றும், சென்னை போயஸ் தோட்டத்தில் இருந்த தனது தாய் இறந்துவிட்டதால் அவரது வாரிசான எனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டுமென விண்ணப்பித்துள்ளார்.
கடந்த ஜன. 27ஆம் தேதியே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தில், மீனாட்சியை பற்றிய ஆவணம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதனை பார்த்த மதுரை வடக்கு தாலுகா அதிகாரிகள் மனு மீது எந்த நடவடிக்கை எடுப்பது என்பதில் குழப்பமடைந்தனர்.
விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆனதால், மீனாட்சி மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளார்.
துணை தாசில்தார் ராஜலட்சுமியிடம் வாரிசு சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளார்.
அதற்கு இறந்தவர் சென்னை என்பதால், அங்கு சென்று வாங்கிக்கொள்ளுங்கள் என துணை தாசில்தார் கூறி உள்ளார்.
இதனை ஏற்க மறுத்த மீனாட்சி, எனது தந்தையும், தாயும் என்னை அனாதையாக விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
பழநியில் தங்கரதம் இழுக்கும் உரிமையை எனது தந்தை சோபன்பாபு எனக்கு வழங்கியுள்ளார்.
பழநியில் அதற்கான ஆவணங்களை பெற்றுள்ளேன். நான்தான் அவரின் வாரிசு. வாரிசு சான்றிதழ் கேட்டால் தர மறுக்கிறீர்கள், என துணை தாசில்தாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை கேட்டு ஒட்டுமொத்த தாலுகா அலுவலகமே பெரும் பரபரப்பு அடைந்தது.
நிலைமையை சமாளிக்க, நீங்கள் ‘நீதிமன்றம் சென்று உங்கள் உரிமையை கூறி, உத்தரவு பெற்று வாருங்கள், அதன்பிறகு சான்றிதழ் தருகிறேன் எனக்கூறி அப்பெண்ணை அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கப் பேசிய மீனாட்சி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமது வழக்கறிஞரிடம் கலந்தாலோசிக்கப் போவதாக தெரிவித்தார்.
