Tamil News
கண்டுகொள்ளாத அரசு; கஷ்டப்பட்ட மக்கள்; தனது திருமணத்திற்காக சேர்த்து வைத்த ரூ.10 லட்சத்தை எடுத்து தனது சொந்த கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுத்த இளைஞர்..!
சாலை வசதி இன்றி கஷ்டப்பட்ட தனது கிராம மக்களுக்கு தனது திருமணத்திற்காக சேர்த்து வைத்த ரூ.10 லட்சத்தை எடுத்து சிமெண்ட் சாலை அமைத்து கொடுத்த இளைஞரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், லட்சுமி தம்பதி.
இவர்களின் இளைய மகன் சந்திரசேகர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கொரோனா தொற்றின்போது கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு விதியின் படி சந்திர சேகர் தன் கிராமத்திற்கு வந்து வீட்டிலே இருந்தபடியே தன் பணியினை செய்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையின் போது தன் கிராமத்தில் உள்ள ஒரு சாலை மிகவும் சேரும் சகதியுகமாக காட்சி அளிப்பதை பார்த்த சந்திரசேகர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று தன் கிராமத்தில் நிலவரத்தை எடுத்துக்கூறி சாலை அமைத்து தர வேண்டுமென மனு அளித்தார்.
இதற்கு அரசு அதிகாரிகள் தற்போது எதுவும் நிதி இல்லை என தெரிவித்தனர்.
இந்த சாலைக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டுள்ளார்.
மேலும், இந்த மொத்த செலவையும் தானே செய்து எனது கிராமத்திற்கு சாலை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.
இதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டுமென அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து இது குறித்து பேசியுள்ளார்.
மாவட்ட ஆட்சியரும் உடனே அனுமதி அளித்துள்ளார்.
இதன்பேரில் 14 அடி அகலமும் 270 மீட்டர் தூரம் கொண்ட சிமெண்ட் சாலையை சுமார் ரூ.10.50 லட்சம் செலவில் தன் சொந்த பணத்தை செலவிட்டு சிமெண்ட் சாலை அமைத்துள்ளார்.
சந்திரசேகரன் செயலை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வரை பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.
