Tamil News
திடீரென மணமகன் கையிலிருந்த தாலியை பிடுங்கி மணமகள் கழுத்தில் கட்ட முயன்ற இளைஞர்; அதிர்ந்து போன உறவினர்கள்..!
சென்னை தண்டையார்பேட்டையில், மணமகனிடம் இருந்து தாலியை பறித்து, மணமகளுக்கு கட்ட முயன்ற காதலனுக்கு அடி உதை விழுந்தது.
இதனால் திருமணமும் நின்று போன சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். என்ஜினீயர்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்தனர்.
நேற்று அவர்களது திருமணம் தண்டயார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்து இருந்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு மணமக்கள் வரவேற்பும் சிறப்பாக நடைபெற்றது.
நேற்று காலை 6.30 மணிக்கு மேல் திருமண சடங்குகள் முடிந்து மணமேடையில் மணமகன் மணிகண்டனும், மணமகள் ரேவதியும் அமர்ந்து இருந்தனர்.
வேதமந்திரங்கள் முழங்க மணமகன் மணிகண்டன் தாலியை எடுத்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட தயார் ஆனார்.
அந்த நேரத்தில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென மணமகன் மணிகண்டன் கையில் வைத்திருந்த தாலியை தட்டி விட்டார்.
இதில் தாலி கீழே தரையில் விழுந்தது. இதனால் மணமகன் மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது எதிர்பாராமல் நடந்து விட்டதாக கூறிய அந்த வாலிபர் தாலியை எடுத்து மணிகண்டனிடம் கொடுப்பது போல் நடித்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட முயன்றார்.
இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர் அவனை ஆர்.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தண்டையார்பேட்டை கைலாசம் தெருவைச் சேர்ந்த சதீஷ், வயது.23 என தெரிய வந்தது.
மேலும் சதீஷூம் ரேவதியும், ராயபுரத்திலுள்ள நகைக் கடையில் ஒன்றாக வேலை பார்த்துள்ளனர்.
அப்போது, இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.
ரேவதி தன் காதலை தனது வீட்டில் சொல்லாமல் மறைத்துள்ளார்.
இந்நிலையில் தான் ரேவதி வீட்டில் மணிகண்டனுடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கிடையே ரேவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது பற்றி அறிந்ததும் சதீஷ் கவலை அடைந்தார்.
அவர் எப்படியாவது திருமண நேரத்தில் கடைசியில் புகுந்து ரேவதியின் கழுத்தில் தாலி கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்.
அதன்படி சதீஷ் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்தே திருமண மண்டப தில் சுற்றி வந்துள்ளார். மணமகள் ரேவதியின் நண்பர் என்று கூறியதால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
இதனை சாதகமாக பயன்படுத்திய சதீஷ் மணமேடை வரை அருகே வந்து நின்றார்.
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் கையில் இருந்த தாலியை தட்டி விட்டு அதனை காதலியின் கழுத்தில் கட்ட முயற்சி செய்துள்ளார் என தெரிய வந்தது.
